மாதகல் நுணசை முருகன் கோவில் (Mathagal Nunasai Murugan Kovil)
ஈழத்தில் உள்ள தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஈழத்திலேயே கடம்பமரத்துடன் கூடிய கந்தன் ஆலயம் இதுதான் எனச் சொல்கிறார்கள். இக் கடம்பமரம் மிகவும் தொன்மை வாய்ந்தது. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் ஈழத்திற்கு வரும் போதெல்லாம் இந்த ஆலயத்திற்கு வந்து இவ் ஆலயத்தைத் தரிசிக்காமல் செல்லமாட்டாராம்.
ஈழத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் முருகனை ஒவ்வொரு பெயரால் அழைப்பார்கள். நல்லூர் முருகனை அலங்காரக் கந்தன் என்பர். செல்வச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் முருகனை அன்னதானக் கந்தன் என்பார்கள். எமது ஊரில் எழுந்தருளியிருக்கும் முருகனை காவடிக் கந்தன் என்பார்கள். திருவிழாக் காலங்களில் தமது நேர்த்திக்கடனை காவடிகள் எடுத்துச் செலுத்துவார்கள். ஈழத்தில் உள்ள ஆலயங்களில் அதிகளவு காவடி இக் கோவிலில் தான் எடுக்கப்படும். அதனால் காவடிக் கந்தன் என்றழைப்பர்.
நுணா மரங்கள் சோலைமத்தியில் கடம்பமரம் ஆதியிலே உண்டாகியது கடம்பனை தான் மூர்த்தியாக கொண்டு வேலை அடிமரத்தடியில் பிரதிட்டை செய்து பொங்கல் பூசை செய்து வழிபட்டுவந்தனர். நுணா மரங்களின் மரபுவழி நுணசை என்று இந்தக்கோயிலுக்கு காரணப் பெயரானது.
கடம்பன் பக்கத்தில் திருக்குளம் அமைந்துள்ளது. இதில் 7 குண்டுகள் ஆழமாக இருக்கின்றன. சப்தகன்னிகள் இந்த 7 குண்டுகளிலும் நீராடி உச்சிப்பொழுதில் கடம்பனை வழிபட்டனர் என்பது ஐதீகம். மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாக வணங்கினர்க்கு ஓர்வர்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே”, இது தாயுமானவர் வாக்கு. இந்த நுணசைப் பகுதியில் மூர்த்தி, கடம்பமரம், தீர்த்தம் இந்த மூன்றினாலும் சிறப்பாக அமைந்தது, இயற்கை வழிபாட்டிற்குரிய தேவஸ்தானமாக விளங்கியது. கடம்பமரம் எப்போ தோன்றியது என்று இரண்டு மூன்று தலைமுறைக்கு அப்பால் பட்டவர்களுக்கும் தெரியாது.
வருடாவருடம் திருவிழா நடைபெற்று சித்திரா பூரணை அன்று தீர்த்த விழாவும் நடைபெறுகின்றது. அன்று சித்திரபுத்திரனார் கதை படித்து பக்கத்தில் உள்ள மடத்தில் அன்னதானமும் நடைபெற்று வருகின்றது.